
நியூசிலாந்து அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என நினைத்து இங்கிலாந்து செல்லவில்லை என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்குபெற இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். அதற்கு முன்பாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய கோலி " டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் கடினமானதுதான். டெஸ்ட் விளையாடுவது பெருமைக்குரிய விஷயம். கடந்த 6 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணி நிறையை மாற்றங்களைக் கண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்தின் சூழ்நிலை நியூசிலாந்துக்குச் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை." என்றார்.
மேலும் பேசிய அவர் "அப்படி நினைத்து அங்கு செல்ல மாட்டோம். இருவருக்கும் சமமான போட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம். அதற்கான ஆற்றல் எங்களிடம் உள்ளது. வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள். தோல்வியடைந்துவிடுவோம் என்ற எண்ணம் எங்களுக்கு துளிகூட இல்லை. அப்படி நினைப்பவர்கள் விமானத்தில் ஏற வேண்டாம் என கூறிவிட்டேன்" என்றார் விராட் கோலி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ie2E4U
via IFTTT
0 Comments
Thanks for reading