
இந்தியர்களை அவர்கள் மதிப்பதில்லை, ஏதோ ஐபிஎல் வந்ததால் நம் பின்னே அவர்கள் அலைகிறார்கள், பூட்ஸ் கால்களை நக்குகிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் நிறவெறி, இனபாகுபாடு மற்றும் இந்தியர்களின் ஆங்கில புலைமயை தவறாக சித்தரித்தல் போன்ற சர்ச்சைகள் சமூக வலைத்தளத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறது. இதில் நியூசிலாந்து உடனான அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஓலி ராபின்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட நிறவெறி மற்றும் பாலியல் ட்வீட்டுகளால் அவருக்கு கிரிக்கெட் விளையாட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்தியர்களை கிண்டலடித்தது தொடர்பாக இயான் மார்கன் மற்றும் ஜோஸ் பட்லரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஒலி ராபின்சன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிருப்தி தெரிவித்தாகவும், இடைக்கால தடை மீதான நடவடிக்கைக்கு அவர் உடன்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பரூக் இன்ஜினியர் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்"க்கு அளித்த பேட்டியில் "போரிஸ் ஜான்சன் இந்த விவகாரத்தில் தலையிடுவதே தவறு என நினைக்கிறேன். ராபின்சனை அவர் கடுமையாக தண்டித்து இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. ராபின்சன் செய்த காரியத்துக்கு அதற்கான தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது" என்றார்.

மேலும் பேசிய பரூக் இன்ஜினியர் " 18 வயதாக இருக்கும்போது அந்தப் பதிவை போட்டதாக ராபின்சன் கூறுகிறார். இதை சொல்வதற்கு அவர் வெட்கப்பட வேண்டும். அந்த வயதில்தான் பொறுப்புணர்வு இருந்திருக்க வேண்டும். அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அப்படி தப்பினால் இந்த நிலையே தொடரும். பின்பு யார் வேண்டுமானாலும் ஆசிய மக்கள் மீது தவறான கருத்துகளை தெரிவிக்கும் வாய்ப்பு உருவாகும். பின்பு இதற்கு ஓர் முடிவே இல்லாமல் செல்லும். அதற்காக நான் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என சொல்லவில்லை. கடுமையான தண்டனையும், தன்னுடைய சேமிப்பை காலி செய்யும் வகையிலான அபராதமும் விதிக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர் "நான் முதல் முதலாக இங்கிலாந்து வந்தபோது நான் இந்தியர் என தெரிந்ததும் என் மீதான இனவெறி பேச்சுகள் தொடர்ந்தது. பின்பு நான் இங்கிருக்கும் லாங்கஷர் கவுண்ட்டி அணிக்கு கூட விளையாடி இருக்கிறேன். தனிப்பட்ட முறையிலான தாக்குதல் இல்லை ஆனால் இந்தியர் என்றாலே அபத்தமான பேச்சுகளும் பாகுபாடும் இருக்கும். ஆங்கிலம் பேசுவது குறித்து என்ன நகைச்சுவை இருக்கிறது என தெரியவில்லை. நான் இங்கிருக்கும் இங்கிலாந்து மக்கள் பேசும் ஆங்கிலத்தைவிட நான் சிறப்பாகவே பேசுவேன். அதனால் என்னிடம் யாரும் மோதமாட்டார்கள். நான் எப்போதும் இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்" என்றார் பரூக் இன்ஜினியர்.

இன்னும் காட்டமாக பேசிய பரூக் இன்ஜினியர் "ஏதாவது இதுபோன்ற பிரச்னை எழுந்தால் இந்தியர்களை புறக்கணியுங்கள் என்ற கோஷம் தொடங்கும். இங்கிலாந்து மட்டுமல்ல ஆஸ்திரேலியாவும் அப்படிதான். நாமெல்லாம் அவர்களுக்கு சில காலங்கள் முன்பு வரை ‘bloody Indians’தான். எப்போது ஐபிஎல் ஆரம்பித்ததோ அப்போதிருந்து நம் பின்னே சுற்ற ஆரம்பித்தார்கள். பணம் அதிகம் வருவதால் நம்முடை பூட்ஸ் கால்களை இப்போது நக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்தியா அவர்களுக்கு அருமையான நாடு. என்னைப்போன்றவர்களுக்குதான் இவர்களுடைய லட்சணம் தெரியும்" என்றார் அவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zh0Xd1
via IFTTT
0 Comments
Thanks for reading