
கொரோனா பெரும்பிணி காரணமாக ஓராண்டு காலம் ஒத்திவைக்கப்பட்ட யூரோ கோப்பை போட்டிகள் இன்று முதல் களைகட்டவுள்ளன. முதல் போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்றுள்ள இத்தாலி அணி, துருக்கியை எதிர்கொள்ள உள்ளது.
24 நாட்டு அணிகளின் படையெடுப்பு. மைதானங்களில் 25 முதல் 45 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி. தொலைக்காட்சியில் காணக் காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் என ஐரோப்பிய நாடுகளில் உள்ள 11 பெருநகரங்களில் களைகட்ட உள்ளது யூரோ கோப்பை போட்டிகள்.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஸ்டேடியோ ஒலிம்பிக்கோ மைதானத்தில் முதல் போட்டி அரங்கேறுகிறது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இத்தாலி அணியும், துருக்கி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சர்வதேச தரநிலையில் இத்தாலி 7 ஆவது இடத்திலும், துருக்கி 29 ஆவது இடத்திலும் உள்ளன. 1968-ஆம் ஆண்டு பட்டம் வென்ற இத்தாலி அணி, 53 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தத்தொடரில் களமிறங்குகிறது.
k
அனுபவ வீரர் ஜியார்ஜியோ செலினி தலைமையில் களமிறங்கும் இத்தாலி அணியில் நிக்கோலஸ் பரல்லா, ஃபெட்ரிகோ செசியா, ஜோர்ஜினோ, பெலோட்டி, சிரோ இம்மொபைல், லோரன்சோ இன்சைன் போன்ற ஜாம்பவான் வீரர்கள் உள்ளனர்.கியன்லுகி பஃபன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், 22 வயதான இளம் கோல்கீப்பர் கியன்லுகி தடுப்பு அரணாக செயல்பட உள்ளார். துருக்கி அணியின் பலத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏ.சி மிலன் கிளப் அணியில் விளையாடும் ஹக்கான் சால்ஹனுலு , 35 வயது அனுபவ வீரராக புரக் யில்மாஸ், ஜெகி செலீஸ், யுசுப் யாசி போன்ற நட்சத்திர வீரர்கள் துருக்கி அணியில் உள்ளனர்.
என்றாலும் வரலாறு எப்போதும் இத்தாலி அணிக்கு சாதகமாகவே உள்ளது. இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் இத்தாலி அணியே வென்றுள்ளது. 3 போட்டிகள் ட்ராவாகியுள்ளது. முதல் நாளில் ஏ பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் வேல்ஸ் அணி, சுவிட்சர்லாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2TkViCa
via IFTTT
0 Comments
Thanks for reading