
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அட்டவணையில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 29 ஆட்டங்கள் நடந்த நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் இன்னும் 31 ஆட்டங்களை நடத்த வேண்டும். இந்த போட்டிகளை உலகக் கோப்பைக்கு முன்பு செப்டம்பர்-அக்டோபரில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கேற்ற வகையில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது. இந்திய கிரிக்கெட் அணி 6 டெஸ்டில் விளையாடுவதற்காக வருகிற 2-ஆம் தேதி இங்கிலாந்து செல்கிறது. முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜூன் 18 ஆம் தேதியில் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4 இல் தொடங்கும் டெஸ்டை முன்னதாக ஆரம்பிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. செப்டம்பர் 14 ஆம் தேதி முடிவடையும் டெஸ்ட் தொடரை செப்டம்பர் 7-க்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொண்டு இருந்தது. ஆனால் இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்தால் அட்டவணையை மாற்றி அமைக்க விரும்பவில்லை. இதனால் இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2SnVRuD
via IFTTT
0 Comments
Thanks for reading